"வடக்கு, கிழக்கு மக்கள் அரசியலில் நல்ல முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்களுக்கு ராஜபக்சக்கள் அரசியல் பாடம் புகட்டத் தேவையில்லை."
- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு முட்டாள்தனமானது எனவும், இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டமைக்குச் சமனானது எனவும், எனவே, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தீர்க்கமான அரசியல் தீர்மானத்தை எடுத்து தங்கள் வாக்குகளைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வகையிலேயே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித்தை ஆதரிக்க முடிவெடுத்துள்ளது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் இந்த முடிவுக்குக் கட்டுப்பட்டு தங்கள் வாக்குகளை வழங்குவார்கள். எனவே, அவர்களுக்கு ராஜபக்சக்கள் அரசியல் பாடம் புகட்டத் தேவையில்லை. அரசியலில் அவர்கள் நல்ல முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் கூட்டமைப்பின் தீர்க்கமான தீர்மானத்தை ஒருபோதும் உதறி எறிந்ததில்லை" - என்றார்.